கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி

30 September 2010

பெற்றோர்களின் எதிர்ப்பு பயந்து காதல் ஜோடிகள் போலீஸ் ஸ்டேஷன்களில் தஞ்சம் புகுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நாகரீகத்தில் வளர்ச்சி காணும் போதெல்லாம் ஆனந்தம் கண்ட நாம், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சில நேரங்களில் வருந்த வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு சினிமா, "டிவி' போன்றவை இளம் பெண்கள், இளைஞர்களை சீரழித்து வருகின்றன. படிக்கும் வயதில் காதல் என்ற பெயரில் கல்வியை கோட்டை விடும் சிறிசுகளின் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலைபார்ப்போர் அதிகம் உள்ளனர். அம்மாவின் அரவணைப்பு கிடைக்கும் அளவுக்கு அப்பாவின் கண்டிப்பு கிடைப்பதில்லை. இதனாலேயே மாணவிகள் சிலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். இன்னும் சில இடங்களில் பெற்றோரின் பொறுப்பின்மை குழந்தைகளை சீரழிவுக்கு அழைத்து செல்கிறது.

"டிவி'யில் ஒளிபரப்பாகும் தொடர்களை தங்கள் மகளுடன் உட்கார்ந்து பார்க்கும் தாய்மார்களுக்கு, அதனால் ஏற்படும் விபரீதம் புரிவதில்லை. இன்று சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காமமும், குரோதமும் தொடர்களில் தான் ஒளிபரப்பாகிறது. இதனால் மாணவிகளின் மனம் திசை மாறி ,காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். அதன் பின் பெற்றோரை உதாசினப்படுத்தி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகளும் சினிமா மற்றும் "டிவி' களில் கண்முன்னே காட்டிவிடுகின்றனர். இதற்காக சட்டரீதியாக செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்கின்றனர். இதையை தங்களின் காதலுக்கு போதனையாக எடுத்துக்கொண்டு மாணவிகள் பலரும் காதலனுடன் படி தாண்டுகின்றனர். எல்லாம் அறிந்த பெற்றோரும் வேறு வழியின்றி தனது பெண்ணை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்கின்றனர். பெண்ணே, தன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்து விடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர்.



இது தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே, அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும், வளர்ப்பிலும் காட்டினால் இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி'போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.


Read more...

தேவையற்ற ஒரு அங்கீகாரத்தை பிரச்சினைகளுக்கு கொடுக்காதீர்கள் !

22 September 2010

அன்றாட வாழ்வில் மனிதர்களுக்கு பல விதமான பிரச்சினைகள் வருவதுண்டு. அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு ஒரே மாதிரியாக அமைந்து விட முடியாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதே சமயத்தில், பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கான வழி எளிதான ஒன்றுதான் என்று நான் நம்புகிறேன். அந்த வழி என்னவாக இருக்க வேண்டும் ?.
முதலில் பிரச்சினை நிகழும் காலகட்டத்தில் நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்கின்றோம் என்று பார்ப்போம். சில உதாரணங்கள் கீழே.
கஷ்டத்தில் (அல்லது டென்ஷன் ஆக) இருக்கும் போது உணவின் மீது கவனம் குறைந்து விடுகின்றது. ஒன்று சாப்பாட்டின் அளவு குறைந்து போகின்றது. அல்லது கண்டமேனிக்கு (ஆரோக்கியமில்லாத) ஆகாரங்கள் உள்ளே போகின்றன.

தூக்க நேரங்கள் மாறிப்போய் விடுகின்றன. நிறைய டிவி அல்லது சினிமா பார்க்கின்றோம். லேட்டாக படுக்கைக்கு செல்கிறோம். விடிந்த பிறகும் தூக்கம் களைந்த பின்னரும் கூட படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கின்றோம். உடற்பயிற்சி செய்வது நின்று போகின்றது. லேட்டாக அலுவலகத்திற்கு கிளம்புகின்றோம். அல்லது கட் அடிக்கிறோம்.எல்லோர் மீதும் கோபம் கோபமாய் வருகின்றது. நிறைய பேரிடம் சண்டைக்குப் போகின்றோம். சாலையில் முரட்டுத்தனமாக வாகனம் ஒட்டுகின்றோம்.

ஒரு சிலர் இன்னும் சில படி மேலே சென்று மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாகி பிரச்சினையை மறக்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் பிரச்சினை அதிகமாகிறதே தவிற குறைந்தபாடில்லை.
மேலே சொன்னவையெல்லாம் உடலையும் மனதையும் இன்னமும் தளர்ச்சியாக்கி பிரச்சினைகளை சமாளிக்கும் (அல்லது தீர்வு காணும்) திறனை குறைக்கின்றனவே தவிர எந்த வகையிலும் நமக்கு உதவியாக இருப்பதில்லை. மேலும் கடைசியாக சொன்ன சில விஷயங்கள் நம்மை மீளமுடியாத அபாயங்களுக்கு தள்ளி விடவும் வாய்ப்புக்கள் உள்ளன.

சமீபத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை ஒரு பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி விட, என்னுடைய இயல்பான பழக்க வழக்கங்கள் பலவும் மாறிப்போய் விட்டன. ஒரு வித மந்தமான மனநிலை புதிய சிந்தனைகளை வரவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தன. அப்போது ஒருவடைய சொற்பொழிவை கேட்டேன். அவர் சில கருத்துக்களைக் கூறினார். அவரது பாசிட்டிவான சில கேள்விகள் எனது மனநிலையை வெகுவாக மாற்றியது.

'
அதாவது எண்ணங்களை பதிவு செய்வது என்ற ஒரு நல்ல விஷயத்தை ஏன் நிறுத்தி விட்டோம் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டேன்.பிரச்சினைகள் வரும் போகும். ஆனால் அவற்றை பற்றியெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிராமல் நம்மிடமுள்ள நல்ல பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். எனக்கு புரிந்த வரையில் எவ்வளவு பெரிய கடுமையான காலகட்டமாக இருந்தாலும், ஒருவரது நல்ல பழக்க வழக்கங்களை நிறுத்தி விடக் கூடாது. சொல்லப் போனால் அந்த காலகட்டத்தில் நல்ல விஷயங்களை இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட செய்யலாம். உதாரணம், தொழுகை, குர்ஆன் ஓதுதல், உடற்பயிற்சி, நல்ல புத்தகங்கள், அன்றாட கடமைகளை பெண்டிங் வைக்காதது, சுகாதாரமான உணவு, சிறிய சுற்றுலா போன்றவை. இவை மனதிற்கு சற்று ஓய்வு தருவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் பலத்தை தருகின்றன.

மொத்தத்தில் எந்த ஒரு பிரச்சினையுமே நமது வாழ்க்கையிலிருந்துதான் பிறக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. நாமில்லா விட்டால் பிரச்சினைகளும் இல்லை. ஒரு சிஸ்டத்தை விட அதன் சப் சிஸ்டம் ஒருக்காலும் பெரியதாக இருக்க முடியாது. எனவே நாம் எப்போதுமே நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சினையையும் விட பெரியவைகள்தான்.
பிரச்சினையை வாழ்வின் ஒரு சிறிய அங்கமாக மட்டுமே பார்க்க வேண்டும். வாழ்வை விட பெரியது என்ற தேவையற்ற ஒரு அங்கீகாரத்தை பிரச்சினைகளுக்கு கொடுக்காமல் இருந்தாலே அவற்றை ஓரளவுக்கு எளிதாக சமாளித்துவிடலாம் என்று நான் நம்புகிறேன்.

Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP