சிறிய விஷயங்களில்தான் ஏராளமாக கற்றுக் கொள்ள முடியும்
25 November 2010
பிரம்மாண்டங்களைப் பார்த்துப் பார்த்து, சிறிய விஷயங்களைக் கண்டுகொள்வதில்லை; ஆனால், அந்தச் சிறிய விஷயங்களில்தான் ஏராளமாக கற்றுக் கொள்ள முடிகிறது. அமெரிக்க எழுத்தாளர் தோரோ நடப்பது பற்றி மட்டும் 100 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். பூமியுடன் நேரடியாகத் தொடர்புள்ளவை கால்கள் மட்டுமே. பள்ளிக் காலங்களில் விளையாடுவதைத் தவிர கால்களுக்கு இப்போது வேறெந்த வேலையும் நாம் கொடுப்பதில்லை. சோம்பேறி ஆவதற்கு முதல் அறிகுறி கால்களுக்கு எந்த வேலையும் கொடுக்காததுதான். சைபீரிய பறவைகூட இந்தியாவுக்கு பறந்து வருகிறது. நாம் வசதிகள் இருந்தாலும் இங்குள்ள தாஜ்மகாலைக்கூட பார்க்கச் செல்வதில்லை. பயணம் செய்வதிலுள்ள அனுபவம் வேறெதிலும் கிடைக்காது. கல்விக் கூடங்களில் பயிலும் கல்வி மனித வாழ்க்கைக்கு நேரடியாக பயன்பட்டதில்லை. வகுப்பறை, பாடங்கள், தண்டனைக்குள்ளேயே நாம் முடங்கிவிடுகிறோம்.
ரஷிய எழுத்தாளர் ஆன்டன் ஷெக்காவோ தனது வீட்டின் முன் இருந்த காலியிடத்தில் ஆசிரியர்களுக்காக ஒரு முகாமை அமைக்கப்போ தாகக் கூறினார். ரஷிய ஆசிரியர்கள் கம்பீரத்துடன் இருப்பதில்லை; அவர்களைக் கண்டறிய முடியவில்லை என அவர் குறிப்பிட்டார். கல்வி என்பது ஊதியம் பெறும் வேலை என்பதோடு ஆசிரியர்கள் நின்றுவிடுகிறார்கள். பணியாற்றும் ஊரின் வரலாறு, அந்த மக்களின் பண்பாடு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள ஆசிரியர்கள் முனைப்பு காட்டுவதில்லை என்பதெல்லாம் ஷெக்காவோவின் வருத்தங்கள்.
நம் வகுப்பறைகளில்தான் பேதங்களே தொடங்குகின்றன. அடிமை முறையை ஒழித்து ஆயிரம் ஆண்டுகளாகியும் தொலைக்காட்சிகள் ஒரே நாளில் அடிமை முறையை நமக்குக் கற்றுக் கொடுத்து விடுகின்றன. வீடுகளில் குழந்தைகளைப் பேசவே விடுவதில்லை; தொலைக்காட்சிகள்தான் பேசிக் கொண்டே இருக்கின்றன. நாம் பிரம்மாண்டங்களை நோக்கியே பார்க்கிறோம். அதனால்,சிறிய சிறிய விஷயங்களை கண்டுகொள்வதில்லை. உண்மையில் சிறிய விஷயங்கள்தான், நமக்கு நிறைய கற்றுத் தருகின்றன. தன்னைவிட 5 மடங்கு அதிக எடை கொண்டவற்றை எறும்பு சுமக்கிறது. நாம் எறும்பைக் கண்டவுடன் நசுக்கிக் கொள்கிறோம். அதில் நாம் சுகம் கொள்கிறோம்.
ஒரு கல்லை எடுத்தால், அதை யார் மீதாவது வீசிப் பார்க்கத்தான் நாம் முனைகிறோம். அந்தக் கல் பெரிய மலையின் ஒரு பகுதி என்றுப் பார்ப்பதில்லை. நம்முடைய சிறிய அலட்சியங்களால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகை நரகமாக மாற்றி நமக்கு நாமே கேடு செய்து வருகிறோம். மனிதர்கள் தங்களிடமுள்ள சில சொற்களை, சிந்தனைகளை, செய்கைகளை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்' அபோதுதான்
அது நமக்கும் மற்றவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
0 comments:
Post a Comment