இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

26 November 2010


இதனால் சகலவிதமான மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. எந்த துறை என்று கேட்கிறீர்களா? வேறு எந்த துறை, தொலைநோக்கு பார்வையுடன் அரசே ஏற்று நடத்தும் மதுபான துறையில்தான். தமிழ்நாட்டில் இதுவரை பத்து மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இது இல்லாமல் தற்போது, புதிதாக மூன்று மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் கசிகின்றன. இப்படி, மூன்று தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டுவிட்டால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மதுபான தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்ற பெயரை பெற்று, தமிழ்நாடு முதலிடத்தை அடையும். இதனால் மதுவகைகளின் விலைகள் குறையும் என்று எந்த குடிமகனாவது தப்புக்கணக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. மக்கள் அனைவரும் சோமபானத்தையும், சுறாபானத்தையும் வயிறு முட்ட குடித்து வாழ்நாள் (ஏது?) முழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே கடந்தகால, நிகழ்கால, வருங்கால தமிழக அரசுகளின் முக்கிய விருப்பம் ஆகும்.






குடிமக்களும் எந்தவித விருப்பு, வெறுப்புகளுக்கும் ஆளாகாமல் தினமும் குடித்து நாட்டின் வருவாயை பெருக்கிதருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரி வருவாய் என்பது, கேட்டு வாங்கமுடியவில்லை. கட்டாதவர்கள் அனைவரும், பணக்காரர்களாய் இருப்பதாலும், பாதிக்கும் மேற்பட்டோர் அரசியல்வாதிகளாய் இருப்பதாலும் அவர்களின் நலனை கருதி வரியினை தள்ளுபடி செய்யவேண்டியதாய் உள்ளது. எனவே, தற்போது வருமானத்தை பெருக்க ஒரே வழி, குடிமக்கள் ஆகிய உங்கள் கையில்தான் உள்ளது.

நீங்கள் தினமும் குடித்து குடித்து, அரசினை வளமாக்கினால் நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிப்போம். மேலும், இப்போது ஆசிய பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கும் நமது தமிழக அரசியல்வாதிகள், விரைவிலேயே உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம். அவ்வளவு ஏன்? முடிந்தால், உலகிலேயே பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தையும் பிடிப்போம். யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் இருந்து, உலகின் நெ.1 பணக்காரர். எப்படி இருக்கும்? இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் சொத்துக்களை நமது டாஸ்மாக் கடையில் இழந்து போண்டியாய் போகவேண்டியதுதான். அப்படி நீங்கள் செய்தால், நாங்களும் நன்றி மறவாமல், உங்களை மேம்படுத்த இலவசமாக சில பொருட்களை எலும்புத் துண்டாக தருவோம் என்பதை மிகவும் கர்வத்தோடு கூறிக்கொள்கிறோம்.

மதுபான தொழிற்சாலையில் முதலிடத்தைப் பெற்றுள்ள நாம், விரைவிலேயே மதுவகைகள் விற்பனையிலும் முதலிடத்தை பிடித்து இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்வோம் என்பதை இந்த நேரத்தில் சபதமாக ஏற்போம். வாழ்க திராவிட பாரம்பரியம்! வாழ்க நமது கொள்கைகள்!

0 comments:

Post a Comment

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP