எலும்பு மாற்று அறுவை சிகிச்சை
01 October 2009
புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் எலும்புகள் வங்கியில், இரண்டு ஆண்டுக்கு பின் முதல் முறையாக ஒருவரது உடல் எலும்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தான், ரத்த மாற்று சிகிச்சைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மேற்கொள்ளப் படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு, நான்கு பேரும், அமெரிக்காவில் இருவரிடம் இருந்து எலும்புகள் தானம் பெறப் படுகின்றன. ஆனால், இந்தியாவில் இது தொடர்பாக விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது.எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, டில்லி, அகில இந்திய மருத்துவ அறிவியல் பல்லைக் கழகத்தில் பேராசிரியர் மல்கோத்ராவால், முதல் முதலாக, 1999ம் ஆண்டு, எலும்புகள் வங்கி துவக்கப்பட்டது. இந்தியாவிலேயே உள்ள ஒரே எலும்புகள் வங்கி இது ஒன்று மட்டும் தான்.ஆனால், ஆண்டுக்கு ஒருவரிடம் இருந்து கூட, எலும்புகள் தானம் கிடைப்பது இல்லை. கடைசி யாக, 2007ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, அகில இந்திய மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டு, பலனின்றி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தார், அவரது எலும்புகளை தானமாக அளித்தனர். அதன் பின், யாரும் எலும்புகள் தானம் செய்ய முன்வரவில்லை. இதனால், எலும்புகள் வங்கி, பெரும் பற்றாக்குறை சிக்கலை சந்தித்தது. அங்கு மிகச்சில எலும்பு பாகங்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன. பெரிதும் தேவைப்படும், இரண்டு ஜோடி கை, கால் எலும்புகள் கூட இல்லாத நிலை இருந்தது. தற்போது இந்த எலும்பு வங்கியில், நான்கு முழங்கால் எலும்புகளும், இரண்டு இடது பக்க எலும்பு கிண்ணங்களும் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. தொடை எலும்பே இல்லாத நிலை இருந்தது.இந்நிலையில், அகில இந்திய மருத்துவமனைக்கு இதயம் பழுதான நிலையில் காசியாபாத்தை சேர்ந்த ஒருவர் கொண்டு வரப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் முழுவதையும் தானம் செய்ய அவரது குடும்பத் தினர் முன் வந்தனர். ஆனால், இதில் இவர்கள் விளம்பரம் தேடிக் கொள்ள விரும்ப வில்லை. உடல் தானம் செய்வோரின் பெயரையோ, விவரங்களையோ வெளியிடக் கூடாது என்பது தான் அவர்கள் விதித்த ஒரே நிபந்தனை.ஆனால், இதய நோயால் அவர் இறந்ததால், அவரது கண்கள் மற்றும் எலும்புகளை மட்டும் தானமாக பெற டாக்டர்கள் ஒப்புக் கொண்டனர். இதன் படி, அவரது கண்கள் எடுக்கப்பட்டன.இறந்து போனவரின் இடுப்பு எலும்பு, இரண்டு கால்களின் தொடை எலும்புகள், முழங்கால் எலும்புகள், முழங்கால் எலும்பு மூட்டு, அதனுடன் இணைந்த தசைநார் போன்றவை எடுக்கப் பட்டுள்ளன.பொதுவாக, இவ்வாறு தானம் பெறப்படும் எலும்புகள் மற்றும் தசை நார்கள், மைனஸ் 70 டிகிரி சென்டிகிரேட் குளிர்நிலையில் வைக்கப்படும். இவற்றை ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.தற்போது எலும்பு தானம் அளித்தவரால், குறைந்தபட்சம் 15 பேர் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவரிடம் இருந்து எடுக்கப்பட்ட தசைநார்கள், விளையாட்டு போட்டிகளில் தசைநார் பாதிப்படையும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பொருத்த உதவும். இடுப்பு எலும்பு, முழு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். பல்வேறு விபத்துக்களில் கை, கால்களில் பல இடங்களில் எலும்புகள் உடைந்தும் நொறுங்கியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது பயன்படுத்தப்படும். அதே போல, எலும்பு மஜ்ஜை நோய், எலும்பு புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும்.இது போன்று மேற்கொள்ளப்பட்டுள்ள எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. எலும்புகள் வங்கி துவக்கப்பட்ட பின் இதுவரை ஒன்பது பேர் மட்டுமே உறுப்பு தானம் வழங்கி உள்ளனர். அவர்களில் ஆறு பேர் ஆண்கள்; மூவர் பெண்கள். இவர்களிடம் இருந்து தானம் பெறப்பட்ட எலும்புகள் மூலம், 250 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். எலும்புகளை தானம் கொடுப்பதால், இறந்தவரின் உடல் பார்ப்பதற்கு அருவெறுப்பான தோற்றத்தில் காணப்படும் என்ற தவறான எண்ணமும், மக்கள் மத்தியில் உள்ளது. எலும்புகளை தானமாக எடுக்கும் போது, எலும்புகள் எடுக்கப்பட்ட இடத்தில், அவற்றுக்கு பதிலாக கட்டைகள், சிந்தடிக் கம்பளி போன்றவற்றை பயன்படுத்தி, எலும்புகள் இருந்த இடங்கள் அடைக் கப்பட்டு விடும். உடலை பெற்றுச் செல்லும் போது, எலும்புகள் எடுக்கப்பட்ட பகுதிகளில், தையல் போடப்பட்டு இருப்பது மட்டுமே தெரியும்."ஆனால், எலும்புகள் தானம் கொடுத்தால், உடல் துண்டு துண்டாகத் தான் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டுள்ளனர் அப்பாவி மக்கள்' என்று வருத்தப்படுகிறார், எலும்பு வங்கியை துவக்கிய மல்கோத்ரா.
0 comments:
Post a Comment