மாத்திரை வடிவில் இருக்கும் "வைட்டமின்- கவனம் செலுத்துவது அவசியம்
04 July 2011
குழந்தை கொழுக்... மொழுக் என்று வளர ; இளமை இனிக்க; எலும்பின் வீரியம் எகிற; முதுமையை முறியடிக்க... வைட்டமின்கள்தான் அடிப்படை காரணம் - அவற்றின் வீரிய சக்தி. இயற்கையாக நமது உணவின் மூலம் கிடைக்கும் வைட்டமின்கள் "ஓகே'. ஆனால் மாத்திரை வடிவில் இருக்கும் "வைட்டமின்-டி'யும், கால்சியம் "சப்ளிமென்ட்டு'களும் கிட்னியை சட்னியாக்கிவிடும் என்பதுதான் அதிர வைக்கும் தகவல்.
வைட்டமின்களில் இரண்டு வகை உண்டு. குறிப்பாக வைட்டமின் பி, சி தண்ணீரில் கரையும். ஒரு சில கொழுப்புத் திரவத்தில் மட்டுமே கரையும். "வைட்டமின்-டி' இரண்டாவது ரகம்.
இது குறித்து பிரபல பொதுமருத்துவர்களிடம் கேட்டோம்.
""நம்நாடு மித வெப்ப நாடு. அதனால் அதிகாலை "சுளீரென்று அடிக்கும் வெயிலின் முன்னால், அரை மணி நேரம் உட்கார்ந்தாலே போதும். உடல் தேவையான அளவு "வைட்டமின்-டி'யை கிரகித்துக்கொள்ளும்.
மாறாக லண்டன், சுவீஸ், நார்வே மாதிரியான குளிர் நாடுகள்ல சூரிய வெளிச்சம் கிடைக்காது. அங்குள்ளவர்கள் "வைட்டமின்-டி' மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. மாறாக நம்மூருக்கு தேவையில்லை. அப்படியே எடுத்துக்கொண்டாலும் கரையாமல் போய் இதயம் உள்ளிட்ட "சென்சிட்டிவான' இடங்களில் போய் ஆங்காங்கே தேங்கிவிடும்.
இது மிகப் பெரிய ஆபத்து. இதனால் இணைப்பு மூட்டுகளில் வலி, அழற்சி ஏற்டும்!''-என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார்.
பொதுவாக உயர் ரத்த அழுத்தம், டயாபடீஸ், மனச்சிதைவு, ஒழுங்கற்ற இதயதுடிப்பு, நரம்புப்பிரச்னைகளுக்கு வைட்டமின்-டி, "கால்சியம்' மாத்திரைகள் சிபாரிசு செய்யப்படுவது உண்டு. ஆனால் ஒரு சிலர் மருந்துகள் தேவைப்படாத நேரத்தில் கூட இந்த மாத்திரைகளைப் பயன்படுத்துவதான் பிரச்னைக்கு முதல் வழி.
இதனால் "வைட்டமின்-டி' மட்டும்தான் என்றில்லை. கால்சியத்தின் அளவு அதிகரித்தாலும் ஆபத்துதான் என்கிறார்கள். இது உண்மையா?
""ஆமாம்! பொதுவாக மாதவிலக்கு நின்றுபோன பெண்களின் உடலில் எலும்புத்தேய்மானம் ஏற்படும். அதனைச் சமன்படுத்த "கால்சியம் சப்ளிமென்ட்டுகள்' சிபாரிசு செய்யப்படும். குறிப்பாக வயதானவர்களுக்கு இத்தகைய சிபாரிசு அவசியம். ஆனால் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக "கால்சியம் சப்ளிமென்ட்டுகள்' எடுப்பதால் வேறு வகையான உடல் பாதிப்பு வரும்!'' என்கிறார் பிரபல சர்க்கரை, ஹார்மோன் மருத்துவ நிபுணர்.
அவரே தொடர்ந்து, ""ஒரு விஷயம் தெரியுமா? வைட்டமின்-டியும், கால்சியமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல்தான். இரண்டுமே மனித உறுப்புகளின் உறுதிக்குத் தேவை.
ஆனால் அதற்கென்று ஒரு "லிமிட்' இருக்கு. உதாரணமாக அளவுக்கு அதிகமாக உடலுக்குள் போகும் "கால்சியம் சப்ளிமென்ட்' சிறுநீரகத்தில் கல்லாய் மாறி உயிரை வாங்கும்.
ஒருவேளை இந்த சப்ளிமென்ட்டுகள் குறைந்தால் வருவது மிகப்பெரிய பாதிப்பு... பெயர்... "ஆஸ்டியோ மலேசியா'. இதனால் உடலில் அதீத வலி ஏற்படும். தொடர்ந்து தசைகள் செயலிழக்கும். இது ஒரு சாம்பிள்தான். சிலர் ஒரு படி மேலே போய், அதிக அளவு "ஆக்டிவ் வைட்டமின்-டி' "சப்ளிமென்ட்' எடுத்துண்டு. இது மிகப்பெரிய ஆபத்து. இதனைத் தெரிந்துகொள்ள பரிசோதனை இருக்கு!'' என்று சொல்லும் மருத்துவர், முடிந்தவரை கர்ப்பிணிப் பெண்கள் இத்தகைய "சப்ளிமென்ட்டுகள்' எடுப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். அப்போதுதான் பாதிப்பைத் தடுக்க முடியும்! என்கிற தகவலையும் பதிவு செய்கிறார்.
0 comments:
Post a Comment