ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடிகள்

30 October 2011


கொள்ளை, வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற குற்றங்கள் நடந்தால் பெரிய பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளும் பாதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது உலகம் முழுவதும் நவீனமயமாக்கத்தின் காரணமாக யாரும் தங்களுடன் பெரிய அளவில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்று வந்து விட்டதால், டூத் பேஸ்ட் முதல் தங்கம் வரை கார்டு மூலமாகவே கொள்முதல் செய்து கொள்ளலாம். தெருவுக்குத் தெரு ஏடிஎம் மையங்கள் வந்து விட்டன. அதோடு தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் மட்டும் பணம் எடுக்க வேண்டியதில்லை. எந்த வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்ற நிலை உள்ளது.

நவீனமயத்துக்கு ஏற்ப மோசடிகளும் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெளிநாட்டு கிரெடிட் கார்டுகள் போல போலியான கார்டுகளை தயாரித்த ஒரு கும்பல், தமிழகத்தில் வந்து அதை பயன்படுத்தி மோசடி செய்தனர். பின் கடைக்காரர்கள், நமது நாட்டு வங்கியில் பணம் பெறுவார்கள். இந்திய வங்கி, வெளிநாட்டு வங்கியைத் தொடர்பு கொண்டால், எங்கள் வங்கி கணக்கு வைத்திருப்பவர் வெளிநாடு செல்லவில்லை என்று கூறுவார்கள். அதன்பின் வங்கிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன.
ஓட்டல்கள், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் பணியாற்றுவார்கள். அவர்களிடம் ஸ்கிம்மர் என்ற சிறிய மிஷின் இருக்கும். இந்த மிஷினில் அந்த கார்டை ஒரு முறை தேய்த்து விட்டால், கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் ஸ்கிம்மர் மிஷினில் பதிவாகிவிடும். பின் ஸ்கிம்மரில் இருந்து கம்ப்யூட்டரில் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை பதிவு செய்து, பின் போலியான கார்டுகளை தயாரித்து இந்தியா போன்ற நாடுகளில் அவற்றை பயன்படுத்தி வந்தனர்.

முதல் வகை மோசடி கீஹோல் கேமரா&ஸ்லாட்

செக்யூரிட்டியோ, கேமராவோ இல்லாத ஏடிஎம் மையத்தை தேர்ந்தெடுக்கின்றனர். ஏடிஎம் மிஷினை படம் எடுத்து கனடாவில் உள்ள ஸ்டீவ் என்பவருக்கு அனுப்புகின்றனர். அவர், கார்டு செலுத்தும் துவாரம் அளவுக்கு சிறிய ஸ்லாட் என்ற கருவியை தயாரித்து அனுப்புகிறார். அதை இந்த ஏடிஎம்மில் கார்டு செலுத்தும் துவாரத்தில் வைக்கின்றனர். பின் மானிட்டர் அருகே சிறிய கேமராவையும் வைத்து விட்டுச் செல்கின்றனர்.

பின் ஏடிஎம் மையத்தின் அருகே லேப் டாப்புடன் நிற்கின்றனர். யாராவது பணம் எடுக்க கார்டை செலுத்தினால், முதலில் இவர்கள் பொறுத்திய ஸ்லாட் கருவியில் பதிந்து விட்டுத்தான் உள்ளே செல்லும். அப்போது வெளியில் வைத்திருக்கும் லேப் டாப்பில் ஏடிஎம்மின் ரகசிய குறியீடுகள் அனைத்தும் வந்து விடும். பின், கேமரா மூலம் அவர்கள் போடும் பின் நம்பரையும் லேப் டாப்பிலேயே பார்த்து விடுகின்றனர். பின் புதிய ஏடிஎம் கார்டை தயாரித்து விடுகின்றனர்.

ஸ்கிம்மர் மூலம் கார்டு

பெட்ரோல் பங்கில் ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து காரில் வரும் 10 பேரின் கார்டை கருவியில் தேய்க்கும்போது மோசடி கும்பல் கொடுக்கும் ஸ்கிம்மர் கருவியிலும் தேய்த்து தரும்படி கூறுகின்றனர். அவர்கள் தேய்த்துக் கொடுத்தவுடன் அதை வைத்து கம்ப்யூட்டரில் தகவல்களை பதிவு செய்து, என்கோடர் கருவி மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை தயாரிக்கின்றனர்.

கூரியர் சர்வீஸ் மூலம் மோசடி

வங்கிகளில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம் ஏடிஎம் கார்டுகள் அனுப்பப்படும். கூரியர் ஊழியர்கள் துணையுடன் கவரைப் பிரித்து, ஏடிஎம் கார்டை எடுத்து, ஸ்கிம்மர் மிஷினில் தேய்த்து, என்கோடர் கருவி மூலம் ஏடிஎம் கார்டை தயாரிக்கின்றனர். தபால்களை கிழிக்காமல் பிரிக்க ஹேர் ஹாட் கன் என்ற கருவியை பயன்படுத்துகின்றனர்.

ஷாட்டி யார்?

யாழ்ப்பாணம்தான் ஷாட்டியின் சொந்த ஊர். 1992ல் கனடாவுக்கு அப்பாவுடன் சென்றார். பிளஸ் 2 வரை படித்தார். பின் அப்பா வேலை செய்யும் கலர் லேபில் வேலை கிடைத்தது. அப்போதுதான் ரஷ்யாவை சேர்ந்த ஸ்டீவ் என்பவரின் பழக்கம் கிடைத்தது. ஆரம்பத்தில் அவர் கொடுக்கும் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்துக் கொடுத்தான். அதில் கமிஷன் கிடைத்தது. பின் அவரிடம் இருந்து ஸ்கிம்மர், என்கோடர் மிஷின் மூலம் கார்டு தயாரிக்கும் கலையை கற்றான். பல வழக்குகளிலும் சிக்கினான். 

அதிகமான வழக்கில் சிக்கியதால், கனடா நாட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இலங்கைக்கு 2007ல் அனுப்பப்பட்டான். பின் 2009ல் தமிழகம் வந்தான். அப்போதே மோசடியில் சிக்கினான். இவனுக்கு சென்னையில் உள்ள மோசடி கும்பல்களின் பழக்கம் கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டான். தன்னுடைய கூட்டத்தில் இலங்கையை சேர்ந்தவர்களைத்தான் சேர்த்திருந்தான்.

தனி வெப்சைட்

வெளிநாட்டில் உள்ளவர்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் அனைத்தும் மோசடிக்கு பயன்படுத்தும் ஒரு வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும். அந்த வெப்சைட்டை தொடர்பு கொண்டால், நம்முடைய வங்கிக் கணக்கை கேட்கும். அப்போது அதற்கு குறிப்பிட்ட அளவு பணம் கேட்கும். அதை செலுத்தி விட்டால், நம்முடைய இ மெயில் முகவரிக்கு அனைத்து தகவல்களையும் அனுப்பி விடும். அதில் இருந்து போலி கிரெடிட் கார்டுகளை தயாரிக்கலாம். ஷாட்டியும் அதேபோலத்தான் 2 ஆயிரம் கார்டுகளின் தகவல்களை வாங்கியுள்ளான். இன்னும் யார் யாரின் கார்டுகளை போலியாக தாயாரித்து வைத்துள்ளதோ இந்த மோசடிக் கும்பல். போகப் போகத்தான் தெரியும்.

Read more...

அறிவு சார்ந்த பெற்றோர் ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம்.

29 October 2011


குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள், இன்ஜினியர்கள் அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார்.
பெருமையும், சிறுமையும் பெற்றோர் வளர்ப்பில் வருவது உண்டு. பெற்றோர் குணத்தில் வருவதும் உண்டு. தந்தை  மகனுக்கு செய்யும் கடமை அறிவை கொடுப்பது. மகன் தந்தைக்கு செய்யும் கடமை அவர் கொடுத்த அறிவால் பிறர் புகழ வாழ்வது. இந்த இரண்டு கடமைகளும் சரியாக பின்பற்றப்படும் போது சிறுமைக்கு இடம் இல்லை. எல்லாம் பெருமையே. தன் தந்தையின் அயராத உழைப்பினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் அடுத்து அடுத்து டாக்டர்களாகி, இன்ஜினியர்களாகி சாதனை படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ளது கோட்டூர். முன்னாள் ராணுவ வீரர் மாயாண்டி. மறைந்த இவருக்கு நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். இவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண் டாக்டர்கள். அடுத்தடுத்து இவர்கள் குடும்ப வாரிசுகள் அனைவரும் டாக்டர்களாக உள்ளனர். மாயாண்டியின் மூத்த மகள், இந்த ஊரின் முதல் பெண் டாக்டர் சகுந்தலாபாரதி கூறியதாவது: எங்க அப்பா இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டவர். அதனால் நாட்டுப் பற்றும், கல்வியின் முக்கியத்துவத்தையும் சிறு வயதில் இருந்தே எங்களுக்குள் விதைத்தார். நான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம்.

பாத்திமா கல்லூரியில் பி.யூ.சி., படித்து கொண்டிருந்த போது, எங்கள் ஊரில் இருந்த படிப்பறிவு இல்லாத ஒரு தாத்தா  அப்பாவிடம், 'பொண்ணு ஐ.ஏ.எஸ்., படிச்சு சமூக சேவை செய்யுறதக் காட்டிலும், பல உயிர்களை பிழைக்க வைக்கிற டாக்டருக்கு படிக்க வையுடா ' என்றார். அதிலிருந்து நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். பி.யூ.சி.,யில் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதால் எளிதாக எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது. எம்.டி., படிப்பில் முதலிடம் பெற்றேன். பல்வேறு பகுதிகளில் பணியாற்றி விட்டு, சென்னையில் சூப்பிரண்டாக 15 வருடம் பணியாற்றினேன். என் கணவர் தலைமை செயலகத்தில் சார்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். என்மகன் விஜயஆனந்த், தேனி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். பெண் ராணிசுகன்யா சென்னை மருத்துவக் கல்லூரியில் பெத்தாலஜிஸ்ட்டாக உள்ளார்.

எங்கள் அப்பா அரசுத் துறையில் பணியாற்றியதால் எங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. எங்கள் ஆறு பேருக்கும் வயது வித்தியாசம் பெரிய அளவில் இல்லாததால், தொடர்ந்து வந்த படிப்பு செலவில் அப்பா கஷ்டப்பட்டார். தம்பி அசோக்குமார் எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு தேனியில் மருத்துவமனை வைத்துள்ளார். அவரின் பெண் வித்யா போடி அரசு மருத்துவமனையில் டாக்டர். இன்னொரு பெண் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். இரண்டு மருமகன்களும் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளனர். தங்கை ஜெயலட்சுமி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டராக உள்ளார். அவரின் மகள் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். மூத்த சகோதரன் சவுந்தராஜன் திருச்சி 'பெல்' நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார். அவரின் இரு பிள்ளைகளும் எம்.இ., படித்தவர்கள். அடுத்த சகோதரர் சந்திரசேகர் ஆடிட்டர். அவரின் பெண் ரோகினி மும்பை டாடா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பையன்கள் பி.இ., படித்தவர்கள். கடைசி தம்பி வாசுதேவ பிரபாகரன் மத்திய அரசு பணியில் உள்ளார். மகன்களும் எம்.இ., முடித்து விட்டனர். என் அப்பாவின் கனவு நிறைவேறிவிட்டது. தற்போது என்னால் முடிந்த அளவு கல்வி என்று வருபவருக்கு உதவி செய்கிறேன் என்றார்.

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டர் ஜெயலட்சுமி கூறியதாவது: அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார். சிறுவயதில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால் தான் நான் சாதிக்க முடிந்தது என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய டாக்டர் அசோக்குமார், 'எந்த பொருளாதார கஷ்டத்தையும் உணர முடியாத அளவு அப்பா எங்களை வளர்த்தார்,' என்று கண்கலங்கினார். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். அறிவு சார்ந்த பெற்றோர் ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம். பெற்றோரின் விருப்பம் அறிந்து செயல்பட்டு சாதித்த இந்த குடும்பம் ஒரு சாதனைக்குடும்பம் தானே.

Read more...

தன்னைத்தானே முதலில் படித்துக் கொண்டவர்கள் யார்?

28 October 2011


படிப்பு என்பது பள்ளியில் படிப்பது, புத்தகங்களில் படிப்பது மட்டுமல்ல. வாழ்வில் ஒவ்வொரு நொடியும் படிப்பினை நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் படிப்பு மட்டும்தான் தேர்வுக்குள் அகப்பட்டுக் கொள்கிறது. மற்ற படிப்புகள், நல்ல அனுபவங்களாக சேகரிக்கப்படுகிறது. இதுபோன்ற அனுபவப் படிப்புகளை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும், தத்துவ ஞானிகளாகவும் உயர்வு பெறுகின்றனர். 

மற்றவர்களைப் படிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தன்னைத்தானே படித்துக் கொண்டவர்கள் யார்? மிகவும் குறைவானவர்களே என்று தாராளமாக சொல்லலாம். காரணம், தன்னுடைய பலம் என்ன... 
பலவீனம் என்ன என்று தெரியாமலேயே வாழ்வதால்தான் பலரும் தோல்வி அடைகிறார்கள். எதுவும் சாதிக்க முடியாமல் சோர்வடைகிறார்கள். நாம் அனைவரும் பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை, எத்தனையோ மனிதர்களை சந்தித்து வந்திருக்கிறோம். எத்தனையோ சம்பவங்களைக் கடந்து வந்திருக்கிறோம். அவை எல்லாமே நம்முடைய மனதில் நிற்கிறதா? அல்லது திரும்பவும் நினைத்துப் பார்க்கத்தான் மனம் விரும்புகிறதா? இல்லையே... என்ன காரணம்?

அந்த மனிதர்களிடமோ, சம்பவங்களிடமோ நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. காரணம், அவற்றை நாம் படிக்கவில்லை. வேடிக்கை பார்த்துப் பார்த்தே வாழ்க்கையை வீணடித்து விட்டோம். அதனால்தான் அவைகள் மீண்டும் நம்முடைய நினைவுக்கு வரவில்லை. அதேநேரம் நமக்குப் பிடித்த சம்பவம், பிடித்த மனிதர்கள் நம்முடைய நினைவில் இன்றும் இருக்கிறார்கள் இல்லையா? காரணம், அவற்றை நாம் வெகுவாக நேசித்தோம். அதற்காக நாம் அதிக சிரத்தை எடுத்து செயல்பட்டு இருக்கிறோம்.

வெற்றி மட்டும், நன்மை மட்டும், மகிழ்ச்சி மட்டும், பிடித்தவர்கள் மட்டும் படிப்பினை இல்லை. தோல்வியும், தீமையும், துக்கமும், எதிரிகளும் கூட நமக்குப் படிப்பினைதான். எனவேதான் ஒவ்வொரு நொடியையும் நாம் நேசித்து, அனுபவித்து வாழ வேண்டும் என்கிறது வாழ்க்கை.
புதியது என்று இங்கே எதுவும் இல்லை. ஏற்கனவே இருப்பதை மறந்து போயிருப்போம். அல்லது கடந்து போயிருப்போம். அதை காலத்துக்கு ஏற்றவாறு சுவை மாற்றி, நிறம் மாற்றி, வடிவம் மாற்றிக் கொடுத்தால்... அதுவே புதுமையாகி விடுகிறது.  எந்த பாடப் புத்தகமும், பள்ளிக்கூடமும் அனைத்தையும் சொல்லித் தரமுடியாது. வாழ்க்கையில், மக்களோடு பின்னிப் பிணைந்திருந்த கோடிக்கணக்கான வார்த்தைகளில் இதுவும் ஒன்று.  எது, எப்போது உதவி செய்யும் என்று யாராலும் கணிக்க முடியாது. நிர்ணயிக்க முடியாது. எல்லாவற்றையும் படிப்பவனே எப்போதும், எதற்கும் ஆயத்தமாக இருக்கிறான்.

Read more...

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: செக்ஸ் காட்சிகளை தயாரித்து பணம் பறிக்கும் கும்பல்

27 October 2011


 இ-மெயில் மூலம் நட்பு வலைவிரித்து இளம் பெண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் இ-பயங்கர வாதம் அதிகரித்து விட்டது. உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

எளிய நகரங்களில் மட்டும் அல்லாது, சிறிய ஊர்களில் கூட இன்று இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வசதி படைத்தவர்கள் வீடுகளிலேயே இன்டர்நெட் இணைப்பை வைத்துள்ளனர். இன்டர்நெட் கலாச்சாரம் பெருகி விட்டது. இன்டர்நெட் நல்ல விஷயங்களுக்கு பயன்பட்டது போக, இன்று பல்வேறு குற்றங்களுக்கு ஊற்றுக் கண்ணாக மாறிப் போய் விட்டது.

சமூக விரோதிகள் விரிக்கும் வலையில் சிக்கி இளம் பெண்களும், குடும்ப பெண்ணும் வெளியில் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர்.   குடும்ப கவுரவம், சமூக அந்தஸ்து இவற்றை கருதி பிளாக் மெயில் பேர் வழிகள் கேட்கும் பணத்தை, பொருளை கொடுத்து, வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். இதுவே பிளாக்மெயில் பேர் வழிகளுக்கு உரமிட்டது போல் ஆகி விடுகிறது. இப்படி பல விஷயங்ககள் அமுக்கப்படுவதால், இன்டர்நெட் குற்றவாளிகளை பிடிப்பது சைபர்கிரைம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 10 வயது பள்ளிச்சிறுமி இன்டர்நெட் மூலம் கிடைத்த நட்பு வலையில் சிக்கி, பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்த சம்பவம் இப்போது வெளியாகி உள்ளது.   சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள் அபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10 வயதான இவள் நகரில் உள்ள பிரபல பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறாள். இந்த வயதிலேயே இன்டர் நெட்டில் இவள் புகுந்து விளையாடுவதை பார்த்து இவளது பெற்றோர் பூரித்துப் போனார்கள்.

இவளது இ.மெயில் முகவரிக்கு தினமும் நிறைய மெசேஜ்கள் வந்தன. அந்த முகவரிக்கு இவளும் பதில் அனுப்புவாள்.   கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவளது இ-மெயிலுக்கு உனது நட்பு தேவை என்று மெசேஜ் வந்தது. அதனுடன் அதை அனுப்பி இருந்தவர், தானும் ஒரு பள்ளி மாணவி என்றும், ஒரு சமயத்தில் அபியுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவள் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அந்த முகம் தெரியாத பெண்ணை அபி நண்பராக ஏற்றுக் கொண்டாள். இருவரும் அடிக்கடி ஆன்-லைனில் பேசிக் கொண்டனர். இப்படியே தொடர்ந்து பழக்கம் சில நாளில் திசை மாறியது. நைசாக பேசி அபியை சில நடவடிக்கைகளுக்கு அவர் உட்படுத்தினாள்.

வெப்-கேமரா முன்பு தனது அங்கங்களை காட்டினாள். இதை விளையாட்டாகவே அபி நினைத்தாள்.   ஆனால், இவளது செய்கைகள் அனைத்தும் வெப்- காமிராவில் படம் பிடிக்கப்பட்டு, எதிர் முனையில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை அபி தன் பெற்றோரிடம் சொல்லவும் இல்லை, மகளின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணிக்கவும் கிடையாது. இப்படியே 3 மாதங்கள் கடந்த நிலையில், அபியின் தந்தைக்கு மிரட்டல் இ- மெயில் வந்தது. அதில் ரூ.50 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் அபியின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் போட்டு விடுவேன். போலீசுக்கு போனால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகும்.

மற்ற இணையத்தளங்களிலும் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்றும் மிரட்டப்பட்டார். இதனால் போலீசுக்கு செல்ல தயங்கினார். பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் இ-மெயில்கள் வந்த வண்ணம் இருந்தன. அபியின் பெற்றோர், தனியார் துப்பறியும் ஏஜென்சியை அணுகி விபரத்தை தெரிவித்தனர். அவர்கள் சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

இது பற்றி, தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இது போன்று நிறைய புகார்கள் எங்களிடம் வந்துள்ளன. பேஸ்புக்கில் முதியவர்கள் கூட இளையவர் போன்று தோற்றமளிக்கும் வகையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இளம் பெண்களை ஏமாற்றுகின்றனர். நட்பு விலையில் விழச்செய்து பெண்களை பிளாக் மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் இ-பயங்கர வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெதர்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை நவீன தொழில் நுட்பம் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகின்றனர்.   ஆனால், இந்தியாவில் போலீசாருக்கு போதிய பயிற்சியும், நுட்பமும் இல்லாததால், சைபர் குற்றங்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இணைய தளத்தில் சாட்டிங்கில்  ஈடுபடுபவர்கள் குறிப்பாக பெண்கள் முன் ஜாக்கிரதையாக கையாண்டால், இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும். வெளிநாடுகள் அல்லது தூரத்தில் இருக்கும் தெரிந்து நட்பு மற்றும் உறவு வட்டாரங்களில் மட்டுமே இ-மெயிலில் பேச வேண்டும். முகம் தெரியாதவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வது, பின்பு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.

முகம் தெரியாதவர்களின் முகவரிக்கு எந்த சூழ்நிலையிலும் போட்டோவை அனுப்ப கூடாது. போட்டோவை வைத்து கூட மார்பிங்முறையில் ஆபாசமாக சித்தரிக்க முடியும் எச்சரிக்கை மிகவும் அவசியம். நன்றி -  மாலைமலர்

Read more...

சிறுவனின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கணினி

25 October 2011


அப்போது அந்தச் சிறுவன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு கணினி (கம்ப்யூட்டர்) அறிமுகப்பட்டது. கணினியைப் பார்த்த சிறுவனுக்கு ஒரே கொண்டாட்டம்! ஒரு நாளில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியைக் கணினியுடன் செலவழிக்க ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் உங்கள் எல்லோரையும் போல வீடியோ விளையாட்டுகளில்தான் அவனுடைய ஆர்வம் இருந்தது. ஆனால் சில மாதங்களில் கணினியின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்வதில் அவனுடைய கவனம் திசை திரும்பியது. அது அவனது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது!

சாப்ட்வேர் என்ஜினியர் அல்லது ஆன்லைனில் பாடம் எடுப்பவர்கள் யார்? குறைந்தபட்சம் ஒரு முதுநிலை பட்டமோ, கணினி மென்பொருள் துறையில் பல படிப்புகளை முடித்தவர்களாகவோ இருப்பார்கள். அவர்களுக்கும் குறைந்தபட்சம் 25 வயதுக்கு மேல் இருக்கும்! ஆனால் சென்னை அடையாறைச் சேர்ந்த 14-வயதேயான அவினாஷ் மகாராஜ் கணினி ஆன்லைன் படிப்பில் ஏறத்தாழ 34 தேர்வுகளை எழுதி அதில் முதல் தர மாணவனாக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார்.
 இது போதாதென்று, அமெரிக்கா, இங்கிலாந்து போன்று பல வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடமும் எடுத்து வருகிறார்.
தற்போது 9-ம் வகுப்பு படித்து வரும் அவினாஷ், அல்காரிதம் எனப்படும் சாப்ட்வேர் கட்டளைகளையும் எழுதி வருகிறார். ஆனால் இவற்றை எழுதுவதற்கு அவர் எந்த நிறுவனத்திலும் பயிற்சி பெறவில்லை என்பதுதான் ஆச்சரியம்!

எப்படி இந்த அளவுக்கு சாதனை புரிய முடிந்தது என்று கேட்டால் அதற்கு அவினாஷின் பதில்:
உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஆன்லைன் புரொஃபஷனல் என்ற பெயரில் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது. இது எனக்குத் தெரிய வந்தது. தேர்வுகளை எழுதிப் பார்க்கலாமே என்று நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினேன்.
முதல் முயற்சியிலேயே அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன். தேர்ச்சிக்குப் பிறகு "மைக்ரோசாப்ஃட் ஆன்லைன் நிபுணர்' என்ற அங்கீகாரமும் சான்றிதழும் கிடைத்தது. மைக்ரோசாப்ஃட் அல்லது ஆரக்கிள் நிறுவனம் நடத்திய தேர்விலும் வெற்றிபெற்றேன். பி.இ. உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு வயது வரம்பு உள்ளது. என்னுடைய ஆசையெல்லாம், என்னைப் போன்றவர்களுக்காக அரசு இந்த வயது வரம்பை தளர்த்தினால் நன்றாக இருக்கும். இதனால் இளம் வயதில் பொறியியல் படிப்பை முடித்து சாதனை புரிய முடியும் என்று நினைக்கிறேன். கல்வித்துறையினரும் ஒத்துழைத்தால் என்னைப் போல சாதிக்கத் துடிக்கும் சிறுவர்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும்!'
சிஸ்கோ மற்றும் எளிதில் தேர்வாக முடியாது எனக் கூறப்படும் லினக்ஸ் தேர்விலும் அவினாஷ் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆன்லைனில் 3 பாடங்களில் தேர்வு பெறுவதே சிரமமாக உள்ள நிலையில் 32 தேர்வுகளிலும் அவினாஷ் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என்கிறார் அவினாஷின் தந்தை டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல்.
தற்போது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 9-ம் வகுப்பு படித்து வரும் அவினாஷின் எதிர்கால லட்சியம் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பதும், மென்பொருள் ஆராய்ச்சித் துறையில் ஈடுபடுவதும்தான்!

Read more...

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமைகளும், சிகிச்சையும்


இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு காது கேளாமை கோளாறு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு காரணம் நம் நாட்டில் உள்ள வாகன இரைச்சல், நீண்ட நேரம் அதிக சத்தத்துடன் டி.வி.பார்ப்பது, இசை கேட்பது போன்றவற்றை சொல்லலாம். தீபாவளி சமயங்களில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கும்போது காது கேளாமை கோளாறு மேலும் அதிகமாகும்.
 
எனவே குறைந்த ஒலியை எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதே காதுகளுக்கு நல்லது. காது செவிடான பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது. இதற்கு தனியாக சிகிச்சை என்று எதுவும் கிடையாது. காது கேட்கும் மிஷின் பொருத்தினாலும் துல்லியமாக கேட்காது. தமிழக போலீஸ் தீபாவளி பட்டாசை 125 டெசிபல் ஒலிக்கு அதிகமாக தயாரிக்கவோ, விற்கவோ தடை செய்துள்ளது.
 
இதேபோல் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள்,பெட்ரோல் பங்க், கோர்ட்டு, கோவில்கள் அருகிலும் பட்டாசு வெடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. ராக்கெட் வெடிகள்தான் தீ விபத்துக்கு காரணமாகத் திகழ்கிறது. அதை தீயணைப்பு அலுவலகங்களின் அனுமதி பெற்று வெடிக்கச் செய்தால் பெரிய தீவிபத்துக்களை தடுக்கலாம்.
 
பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். பட்டாசு புகையின் தாக்கம் உடனே தெரியாது. 4,5 நாள் கழித்துதான் அந்த தாக்கத்தை நாம் உணர முடியும். முதலில் இவை தலைவலியை கடுமையாக உண்டாக்கும் மூளையின் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதயநோயாளிகள், நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் பட்டாசு புகையை சுவாசிப்பதை தவிர்ப்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
 
பரிசோதனைகள்........
 
பட்டாசு வெடிக்கும் போது காதில் வலியும்,இரைச்சலும் காணப்பட்டால்  சாதாரண வலிதானே  என்று விட்டு விடுவது நல்லதல்ல. உடனே காது, மூக்கு,  தொண்டை மருத்துவமனையில் உள்ள "ஆடியோல ஜிஸ்ட்'' நிபுணரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. "ஆடியோலஜிஸ்ட்'' நிபுணர் உங்கள் காதின் கோளாறை கேட்டு அதை பரிசோதனை செய்வார்.
 
பியூர்டோன் ஆடியோ மெட்ரிக் பரிசோதனை...... ஒருவருடைய  காது எந்த அளவுக்கு கேட்கும்  திறனை பெற்றுள்ளது என்பதை பியூர்டோன் ஆடியோ மெட்டிக் பரிசோதனை மூலம் கண்டறியலாம். மேலும் நடு காது, அல்லது உள் காதில் பிரச்சினையாப  என்பதையும் துல்லியமாக கண்டு பிடித்து விடலாம்.
 
பிரச்சினையை கண்டறிந்தவுடன்  காது மூக்கு தொண்டை  மருத்துவர் அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்வார். இம்பிடிமென்ஸ் ஆடியோ  மெட்ரி என்ற பரிசோதனை  மூலம் நடு காதில்   உள்ள குறைபாடு   பற்றி அறிந்து கொள்ளலாம்.
 
ஆட்டோ  ஆக்குஸ்டிக் எமிசன்ஸ் என்ற பரிசோதனை மூலம்  உள் காது நன்றாக  செயல்படுகிறதா?   என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். இப்பரிசோதனைக்கு  இன்டர் ஆக்குஸ்டிக் மெஷின் பயன்படுத்தப்படுகிறது.  இந்த மெஷின் காது நன்றாக  செயல்பட்டால் பாஸ் என்றும் நன்றாக செயல்படவில்லை என்றால் `ரெபர்'   என்றும் காட்டும்.
 
பெரா பரிசோதனை........
 
குழந்தைகளின்  மூளை யில் உள்ள காது நரம்பின் செயல்பாடு பற்றி   இந்த பரிசோதனை  மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
 
ஆஸ்துமாவை உண்டாக்கும் பட்டாசு புகை.........
 
பட்டாசுகளில் செம்பு, காட்மியம் காரீயம், துத்தநாகம் பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம், நைட்ரேட், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட பல்வேறு ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயணங்களால் எழும் புகையை சுவாசிக்கும் இதய, நுரையீரல் நோயாளிகள் கடுமையான மூச்சுத் திணறலுக்கு உள்ளாவார்கள்.
 
ஆஸ்துமா நோயாளிகளும் பெரும்பாலும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் வெடித்தாலும் அருகே நின்று பட்டாசு புகையை சுவாசிக்க கூடாது. பட்டாசு புகையானது நல்ல உடல் நலத்துடன் இருப்போருக்கு கூட ஆஸ்து மாவை உண்டாக்கும் ஆபத்து உள்ளது. அடிக்கடி சளி, இருமல் அலர்ஜியால் பாதிக்கப்படுபவர்களும் பட்டாசு புகையை சுவாசிப்பது நல்லதல்ல.
 
இது அவர்களது கோளாறை மென்மேலும் அதிகரித்து விடும். பெரும்பாலும் 80 டெசிபல் ஒலி எழும் அளவுக்கு பட்டாசு வெடிப்பவர்கள் விரைவிலேயே காது கேளாமையின் பிடியில் சிக்க நேரிடும். அதிக ஒலியை கேட்கும் சூழலில் இருப்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு, தூக்கமின்மை, காது கேளாமை கோளாறுகள் ஏற்படும். ஒரு மனிதனால் 60 டெசிபல் ஒலி அளவுக்குதான் கேட்க முடியும்.
 
10 டெசிபல் அளவு கூடினால்கூட அந்த ஒலியின் அளவு 2 மடங்கு கூடுதலாக கேட்பது போல் இருக்கும். பட்டாசில் பயன்படுத்தப்படும் செம்புவானது மூளை, தோல், நுரையீரல் போன்ற பகுதிகளை பாதிக்கும். பட்டாசில் சேர்க்கப்படும் காட்மியத்தால் எழும் புகையானது அனீமியா, சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
 
காட்மியத்திற்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மை உண்டு.  காரீயமானது மூளை நரம்புகளை பாதிக்கும். நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும். துத்தநாகமானது தோலை பாதிக்கும். 150 மில்லி கிராம், துத்தநாகத்தால் எழும் புகையை சுவாசிப்பவர்களுக்கு வாந்தி ஏற்படும். நைட்ரேட்டால் எழும் புகையால் தலைவலி உண்டாகும். வயிற்று கோளாறுகள் உண்டாகும்.
 
நிட்ரிட் ரசாயணமானது வாந்தி, சைனஸ் கோளாறுகளை ஏற்படுத்தும். நிட்ரிட்டை அடிக்கடி நுகர்ந்தால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பார்வை இழப்பையும் ஏற்படுத்தி விடும். பாஸ்பரஸ் புகையானது மனிதனின் நரம்பு மண்டலத்தை சீர்குலைக்கும். சிலருக்கு தோலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசில் சேர்க்கப்படும் சல்பரால் எழும் புகையால் கண் பார்வை பாதிக்கும்.
 
தோலில் சிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.  எனவே பட்டாசுகளை அதிக சத்தம் இல்லாமல் வெடிப்போம். நமது உடல் நலத்தை பாதிக்கும் பட்டாசுகளை கவனமாக வெடித்து புகையை சுவாசிப்பதை தவிர்ப்போம் என்றார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். மருத்துவமனையை சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிராமலிங்கம்.
 
பட்டாசில் இருந்து கண்களைப் பாதுகாப்பது எப்படி?
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது புதுப்புது  பட்டாசு ரகங்கள் அறிமுகமான வண்ணம் உள்ளன. பட்டாசு வெடிக்கும் போது சிறிதளவு கவனம் சிதறினாலும் நமது உடலை பதம் பார்த்து விடுகிறது.  கண்களில் பட்டாசு துகள்கள் தாக்கினால் நிரந்தமாக பார்வை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி பட்டாசு வெடிப்பது பற்றி பிரபல கண் மருத்துவர் வசுமதி வேதாந்தம்கூறியதாவது:-
 
பட்டாசு வெடிக்கும் போது `பவர் இல்லாத கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களை முழுமையாக மறைக்கும் அளவுள்ள கண்ணாடி அணிவது நல்லது. தீபாவளி சமயத்தில் `ஆன்டிபயாடிக்' கண் மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது நல்லது. பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் தவறுதலாக  பட்டாசு துகள்கள் பட்டால் உடனடியாக இந்த கண் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
 
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவர்களது அருகே நின்று கண்காணிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி விடவேண்டும். வெடிக்காத பட்டாசுகளிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு நீளமான அகர்பத்தி பயன்படுத்தினால் வெடிமருந்து துகள்கள் கண்ணில் படுவதையும், தீப்பிழம்புகள் கண்ணில் படுவதையும் தடுக்க முடியும் என்கிறார்.

கண் விழித்திரை சிகிச்சை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP