மோசடிக்கு வக்காலத்து வாங்கும் ப. சிதம்பரமும், சல்மான் குர்ஷித்தும்.
17 October 2011
தொழிலதிபர்களைச் சிறையில்
அடைப்பதால் இந்தியாவுக்கு முதலீடு வாய்ப்புகள் தடைபடுகிறது' என்று மத்திய சட்டத்துறை
அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ள கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
யூனிடெக் நிர்வாக இயக்குநர்
சஞ்சய் சந்திரா,
2ஜி
வழக்கில் சிறையில் உள்ள ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா ஆகியோரது ஜாமீன்
மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் தங்கள் வருத்தத்தைத்
தெரிவித்ததுடன்,
"தொழிலதிபர்களைச்
சிறையில் தள்ளுவதில் நாங்கள் அதிக ஆர்வம் காட்டுவதைப் போன்ற தோற்றத்தை அமைச்சரின்
கருத்து உருவாக்கியுள்ளது. அவர் பேசியது உண்மைதானா? உண்மையென்றால், அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது' என்று கூறியுள்ளனர்.
சில விவகாரங்கள் தீவிரமாகப்
பேசப்படும்போது,
எதையாகிலும்
ஒன்றைச் சொல்லி,
மக்கள்
கவனத்தைத் திசைதிருப்புவதில் அரசியல் கட்சித் தலைவர்கள் கைதேர்ந்த நிபுணர்கள்.
காங்கிரஸில் இதுநாள்வரை திக்விஜய் சிங், மணிஷ் திவாரி, கபில் சிபல் போன்றவர்கள்தான் இப்படிப்பட்ட
அதிர்வுக் கருத்துகளுக்குப் புகழ் பெற்றவர்கள். இப்போது அமைச்சர் குர்ஷித்தும்
இந்த வரிசையில் சேர்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர்
தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் டிவி நிர்வாக இயக்குநருமான கலாநிதி
மாறன் ஆகியோர் மீது 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும்
நாளில் அமைச்சர் குர்ஷித் இப்படி ஒரு கருத்துத் தெரிவித்திருப்பது எதற்காக என்பது
ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில் தொழிலதிபர்களைச் சிறையில் அடைத்தால் முதலீடுகள்
வராமல் ஸ்தம்பித்துவிட்டதா என்று பார்த்தால் அப்படியேதும் நடந்துவிட்டதாகத்
தெரியவில்லை.
இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த
தொழிலதிபர்கள் எத்தனை பேர் தற்போது சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று
விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுவும்கூட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டுப்
போட்டி கட்டுமானம் மற்றும் கொள்முதலில் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள்தான்.
அனைவரும் அறிந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜு, கர்நாடகத்தில் கனிமச் சுரங்க
அதிபர் ஜனார்த்தன ரெட்டி இவர்களைத் தவிர வேறு பெருந்தொழிலதிபர்கள் யாரும் இதுவரை
கைது செய்யப்படவில்லை. அப்படியே இவர்களைக் கைது செய்திருப்பதால், அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள்
மூடப்பட்டிருக்கிறதா என்றால் அப்படியும் ஏதும் நடக்கவுமில்லை.
தேசியமயமாக்கப்பட்ட
வங்கிகளில் தங்களது நிலத்தையோ, வீட்டையோ அடமானமாக வைத்துக் கடன் வாங்கிய தனிநபர்கள், அந்தக் கடனைத் திருப்பித்தர
முடியாமல் போகும்போது, அடமானமாகத் தரப்படும் வஸ்து ஏலத்தில் விடப்படுகிறது. அதுவரை
சரி. ஐந்து லட்சமும், பத்து லட்சமும் பெறுமானமுள்ள கடனைத் திருப்பித்தர முடியாமல்
தங்களது சொத்துகள் ஏலம் விடப்படுவதைப் பார்த்து மனம் நொந்து போவது போதாது என்று, அவர்களது படங்களுடன்
சம்பந்தப்பட்டவர்களின் மானத்தையும் நமது வங்கிகள் ஏலம் விடுகின்றனவே, இது சரிதானா என்கிற கேள்வியை
எழுப்பாதவர்களே கிடையாது.
தனிநபர் ஒரு சில லட்சங்கள்
கடன் வாங்கிக் கடனைத் திருப்பித்தர முடியாவிட்டால், அவர்களது அடமானத்தை ஏலத்தில் விடுவதுடன்
நிறுத்திக் கொள்ளாமல் படத்தையும் விளம்பரப்படுத்தி அவமானப்படுத்தும் அதே
வங்கிகள், எந்தவித ஈடோ உத்திரவாதமோ
இல்லாமல் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஸ்வாகா செய்துவிட்டு, யோக்கியர்களாக வலம்வரும் பல
தொழிலதிபர்களை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லையே, ஏன்?
இந்தக் கேள்விக்கு ஒரு
விசித்திரமான பதிலைத் தந்து தொழிலதிபர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்திக்
கொண்டார் இன்றைய உள்துறை அமைச்சரும் அன்றைய நிதியமைச்சருமான ப. சிதம்பரம். அதற்கு
அவர் தந்த விளக்கம் - ""பெரும் தொழிலதிபர்களை அவமானப்படுத்தினால், அவர்களது நிறுவனத்தின்
பங்குகள் சரிந்துவிடவும், அதனால் அந்த நிறுவனமே பாதிக்கப்படவும் வழிகோலியதாகும்.
அதனால் பல ஆயிரம் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படக்கூடும்!''
இந்தியாவின் முன்னணித்
தொழில் நிறுவனங்கள் பலவும் பல்வேறு வங்கிகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்று, அதற்கு வட்டியும்
கொடுக்காமல்,
அசலையும்
செலுத்தாமல் தாங்கள் நஷ்டமடைவதாகக் காரணம் காட்டி, ஆட்சியாளர்களின் ஆசியோடு, வாங்கிய கடனில் பாதிப்
பணத்தை மட்டும் வட்டியில்லாமல் கட்டியிருப்பவைதான் என்பது ஒரு விசாரணை வைத்தால்
வெட்டவெளிச்சமாகிவிடும். இப்படி மக்கள் வரிப்பணத்தைத் தங்களது ஆடம்பர
வாழ்க்கைக்கும்,
வியாபார
சூதாட்டத்துக்கும் பயன்படுத்தி வளையவருபவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று
வாதிடும் அமைச்சர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறிக்கொள்ளும்
வேடிக்கை இந்தியாவுக்கு மட்டுமே இருக்கும் தனித்துவங்களில் ஒன்று.
தேசியமயமாக்கப்பட்ட
வங்கிகளின் வாராக்கடன் கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 71,047 கோடி. இது கடந்த ஆண்டைவிட
ரூ. 14 ஆயிரம் கோடி அதிகம். இதில்
ஏறத்தாழ ரூ. 50
ஆயிரம்
கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் தரவேண்டிய வாராக்கடன். இந்தக் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்குத்தான் வக்காலத்து வாங்குகிறார்கள் அமைச்சர்களான ப. சிதம்பரமும், சல்மான் குர்ஷித்தும்.
அது தனிநபராக இருந்தாலும்
சரி, கார்ப்பரேட் நிறுவனங்களாக
இருந்தாலும் சரி சட்டமும் நியாயமும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்? நியாயமும் தர்மமும் இலலாத
வியாபாரம் என்பது மோசடி என்று கருத்துத் தெரிவித்த காந்தி பிறந்த மண்ணில் கதர்ச்
சட்டை அணிந்து,
காங்கிரஸ்காரராக
வளையவரும் அமைச்சர் சல்மான் குர்ஷிதா சொல்வது, தொழில் அதிபர்களைக் கைது செய்யக்கூடாது என்று?
ஏன் சொல்ல மாட்டார்? இவர் பின்பற்றுவது காங்கிரஸை
அல்லவா!
0 comments:
Post a Comment