அறிவு சார்ந்த பெற்றோர் ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம்.

29 October 2011


குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள், இன்ஜினியர்கள் அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார்.
பெருமையும், சிறுமையும் பெற்றோர் வளர்ப்பில் வருவது உண்டு. பெற்றோர் குணத்தில் வருவதும் உண்டு. தந்தை  மகனுக்கு செய்யும் கடமை அறிவை கொடுப்பது. மகன் தந்தைக்கு செய்யும் கடமை அவர் கொடுத்த அறிவால் பிறர் புகழ வாழ்வது. இந்த இரண்டு கடமைகளும் சரியாக பின்பற்றப்படும் போது சிறுமைக்கு இடம் இல்லை. எல்லாம் பெருமையே. தன் தந்தையின் அயராத உழைப்பினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் அடுத்து அடுத்து டாக்டர்களாகி, இன்ஜினியர்களாகி சாதனை படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ளது கோட்டூர். முன்னாள் ராணுவ வீரர் மாயாண்டி. மறைந்த இவருக்கு நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். இவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண் டாக்டர்கள். அடுத்தடுத்து இவர்கள் குடும்ப வாரிசுகள் அனைவரும் டாக்டர்களாக உள்ளனர். மாயாண்டியின் மூத்த மகள், இந்த ஊரின் முதல் பெண் டாக்டர் சகுந்தலாபாரதி கூறியதாவது: எங்க அப்பா இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டவர். அதனால் நாட்டுப் பற்றும், கல்வியின் முக்கியத்துவத்தையும் சிறு வயதில் இருந்தே எங்களுக்குள் விதைத்தார். நான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம்.

பாத்திமா கல்லூரியில் பி.யூ.சி., படித்து கொண்டிருந்த போது, எங்கள் ஊரில் இருந்த படிப்பறிவு இல்லாத ஒரு தாத்தா  அப்பாவிடம், 'பொண்ணு ஐ.ஏ.எஸ்., படிச்சு சமூக சேவை செய்யுறதக் காட்டிலும், பல உயிர்களை பிழைக்க வைக்கிற டாக்டருக்கு படிக்க வையுடா ' என்றார். அதிலிருந்து நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். பி.யூ.சி.,யில் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதால் எளிதாக எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது. எம்.டி., படிப்பில் முதலிடம் பெற்றேன். பல்வேறு பகுதிகளில் பணியாற்றி விட்டு, சென்னையில் சூப்பிரண்டாக 15 வருடம் பணியாற்றினேன். என் கணவர் தலைமை செயலகத்தில் சார்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். என்மகன் விஜயஆனந்த், தேனி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். பெண் ராணிசுகன்யா சென்னை மருத்துவக் கல்லூரியில் பெத்தாலஜிஸ்ட்டாக உள்ளார்.

எங்கள் அப்பா அரசுத் துறையில் பணியாற்றியதால் எங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. எங்கள் ஆறு பேருக்கும் வயது வித்தியாசம் பெரிய அளவில் இல்லாததால், தொடர்ந்து வந்த படிப்பு செலவில் அப்பா கஷ்டப்பட்டார். தம்பி அசோக்குமார் எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு தேனியில் மருத்துவமனை வைத்துள்ளார். அவரின் பெண் வித்யா போடி அரசு மருத்துவமனையில் டாக்டர். இன்னொரு பெண் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். இரண்டு மருமகன்களும் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளனர். தங்கை ஜெயலட்சுமி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டராக உள்ளார். அவரின் மகள் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். மூத்த சகோதரன் சவுந்தராஜன் திருச்சி 'பெல்' நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார். அவரின் இரு பிள்ளைகளும் எம்.இ., படித்தவர்கள். அடுத்த சகோதரர் சந்திரசேகர் ஆடிட்டர். அவரின் பெண் ரோகினி மும்பை டாடா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பையன்கள் பி.இ., படித்தவர்கள். கடைசி தம்பி வாசுதேவ பிரபாகரன் மத்திய அரசு பணியில் உள்ளார். மகன்களும் எம்.இ., முடித்து விட்டனர். என் அப்பாவின் கனவு நிறைவேறிவிட்டது. தற்போது என்னால் முடிந்த அளவு கல்வி என்று வருபவருக்கு உதவி செய்கிறேன் என்றார்.

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டர் ஜெயலட்சுமி கூறியதாவது: அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார். சிறுவயதில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால் தான் நான் சாதிக்க முடிந்தது என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய டாக்டர் அசோக்குமார், 'எந்த பொருளாதார கஷ்டத்தையும் உணர முடியாத அளவு அப்பா எங்களை வளர்த்தார்,' என்று கண்கலங்கினார். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். அறிவு சார்ந்த பெற்றோர் ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம். பெற்றோரின் விருப்பம் அறிந்து செயல்பட்டு சாதித்த இந்த குடும்பம் ஒரு சாதனைக்குடும்பம் தானே.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP