தன்னைத்தானே முதலில் படித்துக் கொண்டவர்கள் யார்?

28 October 2011


படிப்பு என்பது பள்ளியில் படிப்பது, புத்தகங்களில் படிப்பது மட்டுமல்ல. வாழ்வில் ஒவ்வொரு நொடியும் படிப்பினை நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் படிப்பு மட்டும்தான் தேர்வுக்குள் அகப்பட்டுக் கொள்கிறது. மற்ற படிப்புகள், நல்ல அனுபவங்களாக சேகரிக்கப்படுகிறது. இதுபோன்ற அனுபவப் படிப்புகளை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும், தத்துவ ஞானிகளாகவும் உயர்வு பெறுகின்றனர். 

மற்றவர்களைப் படிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தன்னைத்தானே படித்துக் கொண்டவர்கள் யார்? மிகவும் குறைவானவர்களே என்று தாராளமாக சொல்லலாம். காரணம், தன்னுடைய பலம் என்ன... 
பலவீனம் என்ன என்று தெரியாமலேயே வாழ்வதால்தான் பலரும் தோல்வி அடைகிறார்கள். எதுவும் சாதிக்க முடியாமல் சோர்வடைகிறார்கள். நாம் அனைவரும் பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை, எத்தனையோ மனிதர்களை சந்தித்து வந்திருக்கிறோம். எத்தனையோ சம்பவங்களைக் கடந்து வந்திருக்கிறோம். அவை எல்லாமே நம்முடைய மனதில் நிற்கிறதா? அல்லது திரும்பவும் நினைத்துப் பார்க்கத்தான் மனம் விரும்புகிறதா? இல்லையே... என்ன காரணம்?

அந்த மனிதர்களிடமோ, சம்பவங்களிடமோ நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. காரணம், அவற்றை நாம் படிக்கவில்லை. வேடிக்கை பார்த்துப் பார்த்தே வாழ்க்கையை வீணடித்து விட்டோம். அதனால்தான் அவைகள் மீண்டும் நம்முடைய நினைவுக்கு வரவில்லை. அதேநேரம் நமக்குப் பிடித்த சம்பவம், பிடித்த மனிதர்கள் நம்முடைய நினைவில் இன்றும் இருக்கிறார்கள் இல்லையா? காரணம், அவற்றை நாம் வெகுவாக நேசித்தோம். அதற்காக நாம் அதிக சிரத்தை எடுத்து செயல்பட்டு இருக்கிறோம்.

வெற்றி மட்டும், நன்மை மட்டும், மகிழ்ச்சி மட்டும், பிடித்தவர்கள் மட்டும் படிப்பினை இல்லை. தோல்வியும், தீமையும், துக்கமும், எதிரிகளும் கூட நமக்குப் படிப்பினைதான். எனவேதான் ஒவ்வொரு நொடியையும் நாம் நேசித்து, அனுபவித்து வாழ வேண்டும் என்கிறது வாழ்க்கை.
புதியது என்று இங்கே எதுவும் இல்லை. ஏற்கனவே இருப்பதை மறந்து போயிருப்போம். அல்லது கடந்து போயிருப்போம். அதை காலத்துக்கு ஏற்றவாறு சுவை மாற்றி, நிறம் மாற்றி, வடிவம் மாற்றிக் கொடுத்தால்... அதுவே புதுமையாகி விடுகிறது.  எந்த பாடப் புத்தகமும், பள்ளிக்கூடமும் அனைத்தையும் சொல்லித் தரமுடியாது. வாழ்க்கையில், மக்களோடு பின்னிப் பிணைந்திருந்த கோடிக்கணக்கான வார்த்தைகளில் இதுவும் ஒன்று.  எது, எப்போது உதவி செய்யும் என்று யாராலும் கணிக்க முடியாது. நிர்ணயிக்க முடியாது. எல்லாவற்றையும் படிப்பவனே எப்போதும், எதற்கும் ஆயத்தமாக இருக்கிறான்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP