பெற்றோரை காப்பது பிள்ளைகளின் கடமை!
06 October 2011
சாப்பிடாவிட்டாலும் பிள்ளைக்கு சாப்பாடு போட்டு வளர்க்கிறார்கள் பெற்றோர். ஈ, எறும்பு கடிக்காமல் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள். கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து வேலை வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் வளர்ந்தபிறகு பெற்றோரை கவனிப்பது இல்லை. சாப்பாடு போடுவது இல்லை. செலவுக்கு பணம் தருவது இல்லை. சென்னையில் ஒரு குடிகார மகன் தினமும் தாயை போட்டு அடித்திருக்கிறார். மகன் தொல்லை தாங்கமுடியாமல் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்த அந்த தாய், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் வேலம்மாள். இவரின் மகன் தினமும் குடித்துவிட்டுவந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். மகனின் கொடுமை தாங்கமுடியாத அவர், அந்த பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விரக்தியடைந்த வேலம்மாள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். கமிஷனர் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அங்கு குறைதீர்க்கும் மையத்தில் புகார் அளிக்க காத்திருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார், அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விசாரணையில், கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரோ மாட்டாரோ என்று நினைத்த மூதாட்டி, புகார் அளித்தவுடன் இறந்துவிட வேண்டும் என்று முடிவு செய்து வீட்டில் இருந்து வரும்போதே அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டு வந்தது தெரியவந்தது. இதை அறிந்த கமிஷனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெற்றோரின் கடமை. அதைப்போல் நாடி, நரம்பு தளர்ந்துபோன வயதான காலத்தில் பெற்றோரை தவிக்கவிடாமல் காப்பாற்றுவது பிள்ளைகள் கடமை. கடமை தவறும் பிள்ளைகளை சமூகம் மதிப்பது இல்லை. அப்படிப்பட்டவர்களை புழுவாகத்தான் பார்க்கிறார்கள். வயதான பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகளுக்கும் பின்னாளில் அதே கதிதான் ஏற்படும் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள். வீட்டில் வைத்து பராமரிக்க முடியாவிட்டால் முதியோர் இல்லத்தில் சேர்த்தாவது தாய், தகப்பனை கடைசி காலம் வரை காப்பாற்றவேண்டும். அவர்களை தெருவில் விரட்டிவிடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை
0 comments:
Post a Comment