அலுவலகம், கார், அறை எல்லாம் ஏசி ஆனால் ?

10 November 2011


வாழ்க்கை முறை நோய்களான டயபடீஸ், உயர்ரத்த அழுத்தம் ஆகியவற்றை செறிவூட்டப்பட்ட பால் தடுக்கும் என்று தேசிய ஊட்டச்சத்து ஆய்வு நிறுவனம் கூறுகிறது. இதற்கென பாலில் விட்டமின் டி சேர்த்து செறிவூட்டி சோதனை நடத்த அது திட்டமிட்டுள்ளது. உடல்நல குறைபாடுகளை உணவால் சமன்படுத்துவதற்கு நுண்ணிய ஊட்டச்சத்து சேர்க்கும் நடைமுறையை செறிவூட்டுதல் (ஃபோர்டிபிகேஷன்) என்கின்றனர். அதன்படி, பாலில் விட்டமின் டி சேர்ப்பதன் மூலம் வாழ்க்கை முறை உடல் நலக் குறைபாடுகளான உயர்ரத்த அழுத்தம், டயபடீஸ் ஆகியவை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.

இதுபற்றி தேசிய ஊட்டச்சத்து ஆய்வாளர்கள் கூறியதாவது: வாழ்க்கை முறை நோய்களை தடுக்க வைட்டமின் டி அவசியம். அது சூரிய ஒளியில் கிடைக்கிறது. சூரிய ஒளி இல்லாத நாடுகளில் வைட்டமின் டி போதுமான அளவு கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகளில் வெப்பத்தை சமாளிக்க சன்ஸ்கிரீன், லோஷன்களை பயன்படுத்துவதுடன் வெளியில் வராமலும் மக்கள் தவிர்க்கின்றனர்.

இதனால், மற்ற உணவுகளுடன் வைட்டமின் டி சேர்த்து செறிவூட்டுவதன் மூலம் அந்த இழப்பை ஈடுகட்ட ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, பாலில் வைட்டமின் டி சேர்த்து செறிவூட்டினால், அதை பயன்படுத்துவோருக்கு வாழ்க்கை முறை நோய்களான உயர்ரத்த அழுத்தம், டயபடீஸ் ஏற்படுவதை தடுக்க முடியும்.

வைட்டமின் டி பற்றாக்குறையால் எலும்பு அடர்த்தி குறைவு மற்றும் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற நோய்கள் உலகில் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. எனவே, வைட்டமின் டி சேர்த்து செறிவூட்டப்பட்ட பால் பயன்பாட்டுக்கு வந்தால் இவற்றை தடுக்க முடியும். அதை உட்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்தான் இதற்கு வெற்றி கிடைக்கும்.  

கால்சியம், வைட்டமின் டி: எலும்புகள் வலுவாக இருக்க காரணம், வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் தான். வைட்டமின் டி கிடைக்க வேண்டுமானால், நம் உடலில் சூரிய ஒளி பட வேண்டும். கால்சியம் சத்து கிடைக்க பால், பால் பொருட்கள் சாப்பிட வேண்டும்.

வளர்இளம் பருவத்தினருக்கு இரண்டுமே எதிரி. சூரிய ஒளி பட விட மாட்டார்கள். அதுபோல, பால் என்றாலே அவர்களுக்கு "ச்சீ' என்ற நினைப்பு தான். இதில் கால்சியம் சேமிப்பது, எலும்புகள், பற்களில் தான். இங்கிருந்து தான் உடலின் மொத்த வளர்ச்சிக்கான கால்சியம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த இரண்டிலும் கால்சியம் குறைந்து போகும் போது, அறுபது வயதாகி விடுகிறது. அதனால் தான் மூட்டு வலி ஆரம்பமாகிறது. அப்போது, நடக்க முடியாது; உட்கார முடியாது. வயதான காலத்தில் இந்த கஷ்டங்களை பட்டுத்தான் ஆக வேண்டும்.

மூட்டுக்கு மட்டுமல்ல: கால்சியம் சத்து என்பது, ஏதோ மூட்டு, எலும்புகளின் வளர்ச்சிக்கு மட்டும் என்று நீங்கள் நினைத் தால் அது தவறு. ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, நரம்பு மண்டலம் இயங்குவது ஆகியவற்றுக்கு கால்சியம் முக்கியம்.

உடலில் போதுமான கால்சியம் கிடைக்காதபோது, எலும்புகளில் சேமித்து வைத்திருக்கும் கால்சியம் தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனால், கால்சியம் பற்றாக்குறை அதிகரிக்கிறது. இப்படி பற்றாக்குறை ஏற்படும் போது தான், ஆஸ்டோபோரோசிஸ் எட்டிப்பார்க்கிறது. அதாவது, அப்பளமாகும் அளவுக்கு எலும்புகள் பலவீனம் அடையும் நிலை. வயதானவர்கள் , தடுக்கி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்பட காரணம் இந்த நிலை தான். இந்த நிலை முப்பது வயதில் வந்தால் எப்படியிருக்கும்?

எவ்வளவு தான் தேவை? இருபதில், என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஆனால், சத்தான உணவுகளை புறக்கணிக்கக்கூடாது. குறிப்பாக பால், தயிர் போன்ற பொருட்களை. பிரஷ்ஷான மீன், சோயா ஆகியவற்றிலும் கால்சியம் அதிகம் கிடைக்கும். பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடுவதுடன் இவற்றையும் சேர்த்துக் கொண்டால், இந்த பிரச்னையே வராது. கால்சியம் ஒரு நாளைக்கு, குழந்தைக்கு 300 மில்லி கிராம், சிறியவர்களுக்கு 800 மில்லி கிராம், பெரியவர்களுக்கு 1,000 மில்லி கிராம், கர்ப்பிணிகளுக்கு 1,300 மில்லி கிராம் தேவை.

சூரிய ஒளி படட்டும்: காலையில் எழுந்திருக்கும் வரை, "ஏ.சி'., அறையில் தூக்கம். அடுத்து காரில் பயணம்; ஆபீசில் "ஏ.சி'., அறையில் முடக்கம். இரவில் வீடு திரும்பிய பின், "ஏ.சி'., அறை வாசம். இது தான் பலருக்கு கெடுதலாக உள்ளது. டாக்டரை போய்ப்பார்த்தால், முதலில் வெயிலில் காலாற நடங்கள்; வெயில் உங்கள் மீது படட்டும் என்பார். சூரியனும் ஒரு நல்ல டாக்டர் தெரியுமா? நம்மை அறியாமல் நமக்கு வைட்டமின் டி யை தருகிறார். இத்தோடு, கொஞ்சம் உடற்பயிற்சி இருந்தால் போதும்; மூட்டு வலியே வராது. உடற்பயிற்சி என்றால், சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங், ஸ்கிப்பிங் போதும்.

எத்தனை வகை: கால்சியம், வைட்டமின் டி சத்து இல்லாததால், எலும்பு பாதிப்புகள் பல உள்ளன; அவை: ஆஸ்டோமைலிடிஸ்: எலும்பு மஜ்ஜையில் கிருமிகள் தொற்றுவதால் ஏற்படும் பலவீனம்: ஆஸ்டலிடிஸ் பைபரோசா சிஸ்டிகா: வைட்டமின் டி சத்தில்லாததால், எலும்பு திசுக்கள் பலவீனம் அடைவது; ஆஸ்டோமலாசியா: எலும்புகள் மிகவும் இளகி விடுவது.



பால் மனிதர்களுக்கான உணவே அல்ல என்று உலகத்தில் ஒரு சிலர் கொடிபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் குழந்தைகள், பெரியவர்கள் எல்லாரும் மிகவும் விருப்பமாகப் பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். பால் விரும்பிகளுக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போன்ற மகிழ்ச்சியான செய்தி இதோ: ஒரு டம்ளர் பாலில் 20 க்கும் மேற்பட்ட ஆன்ட்டி பயாடிக்குகள், வலி நிவாரணிகள், வளர்ச்சியைத் தூண்டும் சத்துகள் உள்ளன. அழற்சியைத் தடுக்கும் நியின்ஃபுளுமிக் அமிலம், மெஃபினேமிக் அமிலம், வலியைக் குறைக்கும் கெப்ரே ப்ரோஃபென் போன்றவை உள்ளன. பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்கள் சுரக்க உதவும் பொருட்கள் பாலில் உள்ளன. ஸ்பெயின், மெக்ஸிகோ நாட்டு அறிவியலறிஞர்கள் இருபதுவிதமான பசும்பால் மாதிரிகளை ஆராய்ச்சி செய்து இவற்றைக் கண்டறிந்துள்ளார்கள். உடம்பெல்லாம் ஒரே அசதியாக இருக்கிறதா? நல்ல பசும்பால் ஒரு டம்ளர் அருந்திவிட்டுப் படுங்கள். உடல்வலி போய்விடும். ஏனென்றால் பாலில் வலி நிவாரணி உள்ளது. நல்ல பசும்பால் எங்கே கிடைக்கிறது? என்று கேட்கிறீர்களா? நல்ல கேள்வி. பதில்தான்... இல்லை. ஏனெனில் நாம் குடிப்பது எல்லாம் கலந்த பேக்கிங் பால் அல்லவா ?


0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP