மனிதர்களுக்கு கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் சத்து மாத்திரைகள்
24 November 2011
உடல்
வலுவுக்கு சாப்பிடும் சில வகை சத்து மாத்திரைகள், கடும் பக்க
விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்தியாவில் சத்து
மாத்திரை என்ற பெயரில் ஸ்டிராய்டு கலந்த மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம்(எப்.டி.ஏ.,) மத்திய உணவு தர ஆணையத்தை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உணவு தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ஸ்டிராய்டு கலந்த மருந்துகள், சத்து மாத்திரை என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை, மனிதர்களுக்கு கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இவை, உடல்நலத்திற்கு தீங்கு விளைவித்து, மரணத்தை ஏற்படுத்தவல்லது. இவ்வகை ஸ்டிராய்டு சத்து மாத்திரைகளுக்கு, "கிளாஸ்-1 திரும்பப் பெறுதல்' என்ற முத்திரை வழங்கப்படும். அமெரிக்கா மற்றும் சில நாடுகள், ஸ்டிராய்டு கலந்த சத்து மாத்திரை விற்பனைக்கு தடை விதித்துள்ளன. இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மாத்திரைகள் பொதுவாக இன்டர்நெட் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. இதில், "பாடி பில்டிங்.காம்' என்ற இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த, 65 வகை மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிராய்டு கலந்த சத்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு, கல்லீரலில் கடும் பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகள் மற்றும் அதிகமாக உட்கொள்பவர்களுக்கு, நீண்ட நாள் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். சத்து மாத்திரைகள் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையையும், பெண்களுக்கு ஆண் தன்மையையும், குழந்தைகளுக்கு திடீர் வளர்ச்சியையும் ஏற்படுத்தும். இரத்தத்தில் உள்ள பல வகை செல்களின் சராசரி விகிதத்தில் மாற்றத்தையும், மாரடைப்பையும் ஏற்படுத்தும். எனவே, உடல் வலுவுக்கு சத்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், தடை செய்யப்பட்ட சத்து மாத்திரைகளை உட்கொள்வதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதனால் பக்க விளைவுகள் தென்பட்டால், உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்களைக் கொண்ட சத்து மாத்திரைகள், குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு, புதிய விதிமுறைகளை அமல்படுத்த, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. புதிய விதிமுறைகளில் கொடுக்கப்படும் தர அளவுகளின்படி, தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இவ்வாறு மத்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment